செவ்வாய், 6 ஜூன், 2017
இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா
இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா எதிர்வரும் 10.06.2017 சனிக்கிழமை(10.00 AM) அன்று ஹட்டன் மாணிக்கப்பிளிளையார் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும்.அமரர் எஸ் திருச்செந்தூரன் நினைவு அரங்கு திரு லெனின் மதிவானம் தலைமையில் நடைபெறும்.இவ்விழாவில் வரவேற்புரையினை இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின். பொதுச்செயலாளர் திரு .ஆர் சங்கரமணிவண்ணன் நிகழ்த்துவார். பிரதம அதிதியாக யாழ்பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை கல்வியியல்பேராசிரியர் மா. சின்னத்தம்பி அவர்களும் கௌரவ அதிதிகளாக பேராதனைப் பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் அவர்களும் இலங்கையின் கல்வி நிர்வாக சேவை அலுவலர்களுக்கான பயிற்சி இணைப்பாளர் திரு பீ.ஆறுமுகம் அவர்களும் கலந்துகொள்வார்கள். மாலை கலைஞர்+ என் சாம்பசிவமூர்த்தி அரங்கில் நடைபெறவுள்ள இசைச்சங்கமம் ,மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் சம்மேளனத்தின் கலாச்சாரக்குழு தலைவர் திரு எஸ் சிறீஸ்கந்தராஜாவின் தலைமையில் நடைபெறும். இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மெட்ரோ செரமிக் உரிமையாளர் திரு எஸ் பொன்னுசாமி அவர்கள் கலந்து கொள்வார். கௌரவ அதிதிகளாக சமூகசெயற்பாட்டாளரும், கல்வியியலாளருமான திரு. எம். நாகலிங்கம் சூரியகாந்தி ஆசிரியர் திரு சிவலிங்கம் சிவகுமாரன் மற்றும் மலையகத்தின் முன்னனி இசையமைப்பாளர் ரீ.எம் சிறீதரன் அவர்களும், கலந்து சிறப்பிப்பர். சம்மேளனத்தின் பிரதம இணைப்பாளர் திரு.எஸ். சேகர் நன்றியுரை வழங்குவார். நிகழ்ச்சசித் தொகுப்பிணை சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் ஜே.ஜெலூசன் வழங்குவார்.
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015
பதுளையில் ‘கூலித்தமிழ்‘ விமர்சனமும் ‘வெண்கட்டி‘ அறிமுகமும்
இலங்கை கல்விச்
சமூக சம்மேளனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் நூல்
விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை அறிமுகமும் என்ற நிகழ்வு பதுளையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்
ஆர். சங்கர மணிவண்ணன் தலைமையுரை ஆற்றுவதையும், ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் துணைப்பீடாதிபதி
வ. செல்வராஜா, சம்மேளனத்தின் ஊவா மாகாண இணைப்பாளர் திரு. எம். மதன், ஊவா வெல்லஸ்த பல்கலைக்கழக
விரிவுரையாளர் திரு. மா.ரூபவதணன், எம். எஸ்.
இங்கர்சால் ஆகியோர் உரையாற்றுவதையும் கூட்டத்தில்
கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.
சனி, 20 டிசம்பர், 2014
லெனின் மதிவானத்தின்‘ சமூக இலக்கிய தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்‘ ஒரு மதிப்பீடு பேராசிரியர் மா.கருணாநிதி
இனக்குழுக்கள் மற்றும் சமூகக் குழுக்களின் வாழ்வியற் கோலங்களையும் பிரச்சினைகளையும் சமூக பொருளாதார அரசியல் வரலாறு மற்றும் கலாசாரத் தளங்களிலிருந்து ஆராய்தல் இலக்கியங்களின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று. “சமூக - இலக்கியத் தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்” என்னும் தலைப்பில் திறனாய்வாளர் லெனின் மதிவானம் அவர்களால் வெளியிடப்படும் இந்நூல் மலையகம் மற்றும் வடபுலச் சமூகங்களில் இன்னும் தீர்வுகளை எட்டமுடியாமல் இருக்கின்ற பிரச்சினைகளின் யதார்த்தங்களை இலக்கியங்களினூடாகத் தரிசிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நூலின் வாயிலாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ள பதினொரு கட்டுரைகளும் அவற்றில் இடம்பெறுகின்ற படைப்பாளிகளும் உழைக்கும் மக்கள் பக்கம் நின்று அவர்கள் மீதான சமூக ஒடுக்குமுறைகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள், அவற்றின் வெற்றி தோல்விகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். மக்கள் பிரச்சினைகளின் யதார்த்தங்களை அக மற்றும் புறநிலைகளில் நின்று உணர்வுபூர்வமாக வெளிக்கொணர்ந்த படைப்பாளிகள் மிகக்கவனமாகத் தெரிவுசெய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இக்கட்டுரைகள் யாவும் பொதுவுடைமைக் கோட்பாட்டின் பின்னணியில் சமூகங்கள் மீது செலுத்திய பார்வைகளாகவும் உள்ளன. உணர்வுபூர்வமாகச் சிந்திக்கத் தலைப்படுவோரை மேலும் சிந்திக்கத் தூண்டும் இயல்பு இத்தகைய படைப்புகளுக்கு நிறையவே உண்டு.
பெருந்தோட்டத் தொழிலாளராக இலங்கைக்குக் குடிபெயர்ந்த காலம் தொடக்கம் இன்றுவரையில் தேசிய இன அடையாளத்திற்காகப் போராடுகின்ற மலையகமக்களின் வாழ்வாதாரங்களையும் அவலங்களையும் “சிவனு லட்சுமணனின் உயிர்த்தியாகம்”, மு.சி. கந்தையாவின் ‘நிஜங்களின் சத்தம்’, மலையக சமூகத்தின் நினைவுப்பதிவுகள் ஆகிய கட்டுரைகள் எடுத்துக்காட்டுகின்றன. மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்நாட்டில் மட்டுமன்றி புலம்பெயர்ந்த பின்னரும் ஓய்ந்தபாடில்லை.
இத்தேசத்தில் மலையக மக்கள் தனித் தேசிய இனமாக வாழ்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளும் போராட்டங்களும் அச்சமூகத்துள்ளிருந்த மேட்டுக்குடியினராலும் பிற இனக்குழுக்கள் செய்த சூழ்ச்சிகளாலும் தோல்வியைத் தழுவின. தனிநலன்களுக்காகவும் அதிகார நிலைப்புக்காகவும் பிரச்சிகைகைளைக் கண்டும் காணாமல் இருந்தமை மற்றும் காட்டிக்கொடுப்புகள் ஏற்படுத்திய பாதிப்புகளின் விளைவுகளே மலையக மக்களின் இருப்பிற்கான அடிவேர்களை அறுப்பதற்குக் காரணமாயின. அதனால் ஏற்படும் விளைவுகளே மு.சி கந்தையாவின் கவிதை வரிகளாலும் தோழர் இளஞ்செழியன் பற்றிய கட்டுரையின் வழியேயும் மாக்சியக் கோட்பாடுகள், கோட்பாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள், அம்முரண்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் என்பவற்றை நூலாசிரியர் தமது கோணத்திலிருந்து பார்க்கிறார்.
சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் முக்கிய வகிபாகத்தை ஏற்பது சிறுகதைகளா அல்லது நாவல்களா அன்றேல் வேறு வடிவங்களா என்ற வாதத்தினை முன்வைத்து, சிறுகதைகள்தான் என்ற முடிவுக்கு வந்து, சிறுககைள் ஊடாக யாழ்ப்பாண சமூகம் பற்றிய ஆழமான ஊடுபார்வையை செலுத்தியுள்ளது இந்நூல். கே.ஆர்.டேவிட், தெணியான், புஷ்பராணி ஆகியோரது ஆக்கங்களினூடாக யாழ்ப்பாணச் சமூகத்தில் இருந்துவரும் தீராத வடுவான சாதியமைப்பும் அதன் சமூக எதிர்விளைவுகளும், சாதியமைப்பின் குரூரங்களிலிருந்து விடுபடுவதற்கு சமூக விடுதலை இயக்கங்கள் நடாத்திய போராட்டங்கள், அவற்றினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அவற்றின் நிறைவுறாத செல்நெறிகள் என்பவற்றை எடுத்துக்காட்டுவதற்கு ஆசிரியர் முற்பட்டு;ள்ளார். இலக்கியங்கள+டாகப் படைப்பாளிகள் சமூகத்தில் நிலவும் உண்மைநிலைகளையும் அவைபற்றிய தமது பார்வைகளையும் முன்வைத்தல் என்னும் பொறுப்பை நிறைவேற்றியிருக்கின்றார்கள். அத்தகைய இலக்கியங்களுக்குத் தலித் இலக்கியங்கள் எனப் பெயர்சூட்டி மகிழ்கின்ற மெத்தனப் போக்குகளும் உண்டு. ஆனால் படைப்பாளிகள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் சமூக இயல்புநிலையில் மிகமெதுவாகவே நிகழ்கின்றன. கல்வி, புலம்பெயர்வு, தொழில்அமைப்பு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் பொருளாதார மேம்பாடு; முதலிய காரணங்களால் சமூக வகுப்பு நிலைகளில் மாற்றங்கள் நிகழ்வது உண்மையெனினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் அவை புதிய வடிவங்கள் பெறுகின்றனவே தவிர அவை தீர்ந்தபாடில்லை.
தமிழினத்தின் சமூக பொருளாதார, பண்பாட்டு மற்றும் சமுதாயக் கட்டுக்கோப்புகளில் மிகப் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய விடயமாகக் கடந்த முப்பதாண்டுகாலப் போராட்டங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தனி மனிதனும் ஏதோவொரு விதத்தில் இப்போரட்டத்தின் பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியவில்லை. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்கள் வறுமை மற்றும் அதன் வழியேயான துன்ப துயரங்கள் அவர்களின் வாழ்க்கையில் குறுக்க்pட்டன. இத்தகைய நிலைமைகளின் யதார்த்தங்களை போர்க்காலங்களில் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் எடுத்துக்கூறியுள்ளன. இங்கும் கே.ஆர் டேவிட் தெணியான் போன்றவர்கள் குறிப்பிட்டுப் பேசப்பட்டுள்ளார்கள் ஆயினும், இத்தகைய படைப்புகள் யதார்த்தங்களை வெளிப்படுத்தியமை தொடர்பிலும் பல விமர்சனங்கள் உண்டு. அத்தகைய இலக்கியங்கள் கலைத்துவமற்றவை என்பது விமர்சகர்களின் கணிப்பாகும். ஆயினும,; இலங்கையில் பொதுவுடைமைத் தத்துவப் பின்னணியைக் கொண்டுள்ள படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் அரசியல் கலப்பின்றி இலக்கியங்களை வெளிக்கொணர்தல் சாத்தியமாக இருக்கவில்லை என்பதையும் லெனின் மதிவானம் அழுத்த்pக் கூறியுள்ளார்.
கல்வி சமூக மாற்றங்களுக்கு வழிகோலும் ஒரு கருவி அல்லது அக்கல்வியை முக்கொண்டு ஒரு சமூகத்தை உள்ளவாறே பேணலாம் என்பது மாக்சின் வாதமாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் ஆங்கிலக் கல்வி வாய்ப்புகளைப் பெற்றிருந்த மேலோர் குழாத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்கும் சமூகவகுப்பில் மாற்றங்களை உருவாக்குவதற்கும் கல்வி கருவியாக இருந்துள்ளமையை மறுக்க முடியாது. மறுபுறத்திலே பல சமூகக் குழுக்கள் நியாயத்தன்மையுடன்கூடிய வகையில் கல்வியின் பலாபலன்களை அனுபவிக்கும் நிலைமை இருக்கவில்லை என்பதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமே. இச்செல்நெறி வடபுலத்தில் சாதி முயைமையினால் பின்தள்ளப்பட்ட மக்களுக்கும் மலையகத் தொழிலாளருக்கும் பொருந்தும். கடந்த காலங்களில் வெளிவந்துள்ள இலக்கியங்கள் கல்விசார்ந்து சமூகக்குழுக்கள் அனுபவித்த பிரச்சினைகளையும் முன்வைக்கத் தவறவில்லை.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதுகெலும்பாக இருந்து செயற்பட்ட பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களும் தமது பல்வேறு துறைசார் அனுபவங்கினூடான ஆளுமையுடன் மக்கள் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்குப் பொருத்தமான ஆலோசனைகளையும் முன்வைத்தவர். மாக்சியக் கோட்பாடுகளால் கவரப்பட்ட பிரேம்ஜி அவற்றினை இலக்கியம் சார்ந்து பிரயோகிப்பதன்மூலம் சமுதாய விடுதலைக்கு உதவியமுறையை ஆராய்துள்ள லெனின் மதிவானம் பிரேம்ஜி பற்றிய தொடர்ச்சியான பார்வைகளின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பற்றிய பார்வை இடம்பெற்ற விதத்தினை மூன்று வகையில் வகைப்படுத்தி அவற்றின் சார்புநிலை மற்றும் எதிர்விளைவுகளையும் குறிப்பிட்டு அத்தகைய பார்வைகளை மேற்கொண்டோரின் கோட்பாட்டு நிலைகள் பற்றியும் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மறுபுறத்திலே பேராசிரியர் கைலாசபதியின் பங்களிப்புகளைச் சமூக உணர்வு, மற்றும் கரிசனையுடன் அணுகியவர்கள் பற்றிய குறிப்புகளும் இங்கு காணலாம். முற்போக்குத் தளத்திலிருந்து கைலாசபதியை நோக்கியோர் கைலாசபதியின் பங்களிப்புகள், இலக்கியத்தில் அழகியல் பார்வை, தமிழியல் சூழலில் முனைப்புப்பெற்றிருந்த புதிய இலக்கியக் கோட்பாடுகளின் பின்னணியில் அமைந்த விமர்சனங்கள் சிறிதளவில் இடம்பெற்றுள்ளன. கைலாசபதியின் ஆக்கங்கள் தொடர்பான விஞ்ஞான ரீதியான நடுநிலைப்பார்வை செலுத்தியோர் வரிசையில் ந.இரவீந்திரனின் ஆய்வுகளின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக பண்பாட்டுச் சூழல் பற்றிய ஆய்வுகளில் கைலாசபதி விட்டுச்சென்ற இடைவெளியை இரவீந்திரனின் ஆய்வுகள் நிரப்புவதாக அமைகின்றது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் பற்றிய குறிப்புகளில் இடதுசாரி இயக்கத்திற்கான அவரது பங்களிப்புகள், விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பார்வை தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் காட்டிய முனைப்பு, அவருடைய அரசியல் தத்துவம் மலையகத்தில் வேர்கொண்டு கிளைபரப்பிய விதம் முதலிய விடயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. கே.ஏ.சியின் சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகள் எழுத்துலகிலும் சமூக நிலைப்பாடுகளிலும் வேரூன்றிய விதம் தொடர்பான பார்வைகள் பரணீயுடனான நேர்காணல்; வரிகளின் மூலம் தரிசிக்கச் செய்துள்ளமை எமது கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும்.
திரு.லெனின் மதிவானம் அவர்களின் இத்தகைய முயற்சியானது வாழ்க்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டதன் காரணமாக பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்கள் நச்சுவளையத்தின் பிடிக்குள் சிக்குண்டு நலிவுற்று வருகின்றமை தொடர்பாக எமது சிந்தனையை மேலும் கிளறுகின்றது. இத்தகைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கோட்பாடுகள் வழியேயான அணுகுமுறைகளின் விளைதிறன்களை மீள்வாசிப்புச் செய்வதற்கும் இந்நூல் பாதைகளைத் திறந்துள்ளது.
இலக்கியங்கள் அவற்றினை ஆக்குவோரது ஆதங்கங்களை வெளிக்கொணர்வதாக இருக்கின்றனவேயொழிய அவை சமூகத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொணாந்;துள்ளனவா என்ற வாதமும் உண்டு. இவ்வாதத்திற்கான விடையை ஆழமான முறையில் தேடுவதற்கு லெனின் மதிவானம் போன்றவர்களின் பார்வை மேலும் வழிகோலும் எனக் கருதுகின்றேன். இவ்வாறான முயற்சிகளில் அவர்கள் தொடர்ந்தும் ஈடுபடுதல் வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்து முன்னுரையை நிறைவு செய்துகொள்கிறேன்.
வியாழன், 4 டிசம்பர், 2014
லெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு
எதிர்வரும்
டிசம்பர் 20 ஆம் திகதி, கொழும்பு 58, தர்மராஜ வீதியில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு
நிலையத்தில்(WERC), திரு. லெனின் மதிவானம் எழுதிய சமூக
இலக்கியத் தளங்களில் படைப்புகளும்
செயற்பாட்டாளர்களும் என்ற நூல் விமர்சன நிகழ்வை புதிய
பண்பாட்டுத் தளம் அமைப்பினர் ஒழுங்கமைத்துள்ளனர். பேராசிரியர் தை. தனராஜ்
அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் மறைந்த இடதுசாரி இயக்க
முன்னோடி தோழர் கே. ஏ. சுப்பிரமணியத்தின் துணைவியார் திருமதி வள்ளியம்மை
சுப்பிரமணியம் பிரதம அதிதியாக கலந்துக் கொள்வார். போரசிரியர் சோ. சந்திரசேகரம், இலங்கை கல்விச்
சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் ஆகியோர் சிறப்புரை வழங்க
மலைய சமூக ஆய்வாளர், தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி
அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு. எம் வாமதேவன்,சமூக செயற்பாட்டாளரும்
ஆய்வாளருமான கலாநிதி. ந. இரவீந்திரன், பாக்கியா பதிப்பகத்தின் நிறுவகர்
மல்லியப்புச் சந்திதிலகர் ஆகியோர் விமர்சன உரையாற்றுவார்கள். ஏற்புரையை
நூலாசிரியர் வழங்குவார்.
திங்கள், 17 மார்ச், 2014
திங்கள், 7 அக்டோபர், 2013
செவ்வாய், 29 ஜனவரி, 2013
கைலாசபதி பற்றி மீள்பார்வை லெனின் மதிவானம்
பேராசிரியர் கைலாசபதி மறைந்து
முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன.
இந்நிலையில் அவர் பொறுத்து எதிர்பார்த்த வகையில் ஆக்கப்பூர்வமானஆய்வுகள்;
வரவில்லையாயினும்,
சில
குறிப்பிடத்தக்க ஆய்வுகள், மதிப்பீடுகள், வாழ்க்கைக்
குறிப்புகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு குறிப்பிடத்தக்க கட்டுரைகள், நூல்களில்
பெரும்பாலானவைமார்க்சியமுற்போக்காளர்களினால் எழுதப்பட்டவையேயாகும். கைலாசபதியின்
வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் இயக்கவியல் போக்குகளை
அவர் இனங்கண்டு கொண்ட முறையினையும் சமூகவியல் அடிப்படையில் நோக்கியவர்கள்
மேற்கூறியவர்களே. அத்தகைய ஆராய்ச்சிகளை சிறப்பாக முன்னெடுத்தவர்களில் ந.
இரவீந்திரன் குறிப்பிடத்தக்கவர். அவரது எழுத்துக்கள் வரலாற்றையும் பண்பாட்டையும்
மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்பவை. கைலாசபதியின் இலக்கிய பங்களிப்பு பற்றி அவர்
எழுதி முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடான இந்நூல், மார்க்சிய
நோக்கில் கைலாசபதியின் இலக்கிய நோக்கினையும் பங்களிப்பினையும் புரிந்தக்
கொள்வதற்கு பெரும் துணையாக அமையும் என எதிர்பார்க்கலாம். குறுகிய வரம்புகளை கடந்து
தேசிய சர்வதேச அடிப்படையில் அணுகும் போதே இவ்வகையான ஆளுமைகள் பொறுத்த ஆய்வுகள்
அர்த்த முள்ளவையாக உள்ளன.
காலத்தின் போக்குகளும்
நோக்குகளும் இலக்கிய விசாரத்தை பாதிக்க கூடியது என்ற வகையில் கைலாசபதி பற்றிய
மீள்பார்வை செய்கின்ற போது இதுவரை வந்த ஆய்வுகள் பற்றிய தெளிவு அவசியமாதாகும்.
அந்தவகையில் கடந்த காலங்களிங்களில் இடம்பெற்ற கைலாசபதி பற்றிய ஆய்வுகளை மூன்று பெரும் பிரிவுக்குள்
அடக்க கூடியவையாக உள்ளன.
முதலாவது பிரிவினர் கைலாபதியன்
ஆய்வுகளுக்கு எதிர் வினைப் புரிவோர். இவர்களை இரு கோணங்களில் அவதானிக்க கூடியதாக
இருக்கின்றது. ஓன்று தலைக்குணிய வேண்டிய தனிமனித சண்டைகள் தாழ்வு மனப்பாங்கு-
பொறாமையுணர்வு, எழுத்தாளரை தனிமைப்படுத்தி தாழ்வு நிலைக்கு கொண்ட செல்லும் குழ
மனப்பாங்கு என்பன இவர்களின் எதிர்வினைகளில்; முனைப்புற்றிருந்தது.
இப்போக்கிற்கு எடுத்தக்காட்டாக எஸ். பொவின் கைலாசபதி பற்றிய மதிப்பீடுகளைக் குறிப்பிடலாம்.
இந்த போக்கில் கால் பதித்து கைலாபதியை தாக்குகின்ற மதிப்பிடுகளை செய்து வருகின்ற
பிறிதொருவர் நட்சத்திர செவ்விந்தியன். தேசம் நெற்டில் கைலாசபதி பற்றி இவர் எழுதிய
குறிப்புகள் இதனை உறுதி செய்வதாக அமைந்திருக்கின்றன. நட்சத்திர செவ்விந்தியன்
முற்போக்கு இலக்கியத்தை ஏற்க முடியாத நிலையிலும் - அதனை விளங்கிக் கொள்ள முடியாத
நிலையில் இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றார். முற்போக்கு மார்சிய
இலக்கியங்கள் மீது இத்தகைய தாக்குதல்களை நடாத்தி வருகின்ற இவர்களது எதிர்வினைகளில்
ஆத்திரம், ஆபாசம், அங்லாய்ப்பு, ஆற்றலின்மை
முதலிய அம்சங்களே இவ்வணியினரின் எழுத்திகளின்; முத்திரைகளாகியிருக்கின்றன.
இப்பிரிவினுள் உள்ளடக்கத்தக்க
இன்னொரு அணியினர், கைலாசபதி வரித்திருந்த மார்க்சிய தத்துவார்த்தத்தின் மீது
எதிர்வினைப் புரிகின்றவர்கள். அத்தகையவர்களில் முக்கியமானர் மு. தளையசிங்கம். இவர்
மார்க்சியத்தையும் அது சார்ந்த அறிஞர்களையும் ஆன்மீக- கருத்தியல் தளத்தில்
நின்றுக் கொண்டு விமர்சிப்பவர்;. இவ்வாறே கைலாசபதியின் மார்க்சிய
பார்வையின் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தவர்களில் வெங்கட்சாமிநாதன்;. பொதுவாகவே
இவரது கருத்துக்களை ஊன்றிக் கவனிக்கின்ற போது மார்க்சிய எதிர்ப்பு அவரது
எழுத்துக்களில் வேரோடியிருப்பதனைக் காணலாம். இத்தகைய மார்க்சிய எதிர்ப்பு தளத்தில்;
நின்றுக்
கொண்டே கைலாசபதி மீதான தாக்குதலைகளை நடாத்துகின்றார்.
இவ்வகையில் இத்தகையோரின் எதிர்
வினைகள் கைலாபதி சார்ந்திருந்த மார்க்சிய பார்வையின் மீதானதாகவே அமைந்திருந்தன.
இலக்கியத்தில் “மார்க்சியம்”
“முற்போக்கு”
என்ற
சொற்களை கேட்டாலே ஒரு வித அலர்ஜி கொள்ளும் வெ.சா வின் எழுத்துக்களில் எப்போதும்
ஒரு வாசகனை சஞ்சலப்படுத்தும் அம்சங்களே முனைப்பு பெற்று காணப்படுவதை அவரது
எழுத்துக்களை நுணிந்து நோக்குபவர்களால் புரிந்துக் கொள்ள முடியும். அந்தவகையில்
கைலாசபதியின் தமிழ் நாவலிலக்கியம் என்ற நூல் பற்றிய அவரது கட்டுரை
அவதானத்திற்குரியது கொள்ளத்தக்கது. “மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு
குரல்” என்ற அக்கட்டுரை அவரது ஓர் எதிர்ப்புக் குரல் (காலத்தின்
அங்கிகாரத்தை எதிர்நோக்கி),(1978) என்ற நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அக்கட்டுரையில் பின்வரும் பந்தி
கவனத்திற்குரியது:
“இப்பார்வை (கைலாசபதியின்
பார்வை-கட்டுரையசியர்) மார்க்ஸியத்தின் பிறழ்ச்சி. இலக்கியத்திற்கும், கலைக்கும்
சம்பந்தமில்லாத ஒரு அரசியல் பார்வை. அதிலும் ஒரு மனித அதிகாரம், அரசியலாகி
விட்ட நிலையில் பிறந்த அரசியல் பார்வை.…
கலாநிதி க. கைலாபதி, M.A.,
Ph.D
யின் ‘தமிழ்
நாவல் இலக்கியம்’ இத்தகைய அரசியல் பார்வையில் பிறந்த ஒரு கல்லறைக் குரல்”
எனக் குறிப்பிடும் வெ.சா, கைலாசபதியின்
ஆய்வுகள் யாவும் மார்க்சிய வயப்பட்டவை எனவும் சில இடங்களில் அதுவும் போதாமையாக
காணப்படுகின்றது எனவும் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறே கைலாசபதியின் முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சனைகளும் என்ற
கட்டுரை வெளிவந்த காலத்தில் அக்கட்டுரை எதிர் முகாமினரால் கடுமையான
தாக்குதல்களுக்கு உட்பட்டது. அ. யேசுராசா அலை 13 இதழில்(1980
பங்குனி) ‘குருவை மிஞ்சிய சீடப்பிள்ளை’ என்ற கட்டுரை
ஆய்வாளர்களின கவனத்தைப்பெற்றிருந்தது.
அடிப்படையில்; இவர்களின் விமர்சனங்கள் என்பது கைலாசபதியின் கோட்பாட்டிற்கான எதிர்வினை என்பதை
விட கைலாசபதியை கொச்சைப்படுத்துகின்ற
முயற்சிகளாகவே காணப்பட்டன. இலக்கியத்தில் அரசியல் வேண்டாம் என கூறும் இவர்களின்
கூற்றில்; தமக்கு வேண்டாத அரசியலை நிராகரிப்பதாகவே அமைந்திருந்தது.
அந்தவகையில் சமூகமாற்றத்திற்கான அரசியலும் எழுத்தாளர்களும் படைப்புகளும்
நிராகரிக்கப் பட வேண்டும் என்ற கபடமே இவர்களின் அடிப்படையாக அமைந்திருந்தது.
மேலும் முற்போக்கு, மார்க்சிய இலக்கியத்தின் முனைப்பான முக்கியமான எதிரியாக இருந்த
க.நா.சு, மு.தளையசிங்கம் போன்றோரில் அழகியல் பார்வை எவ்வாறு
ஆன்மீகத்துடன் இணைந்து காணப்பட்டது என்பதனையும் அது எவ்வாறு பொது மக்கள் விரோத
பார்வையை முன்னிறுத்தியது என்பதையும் கைலாபதி மிகச் சிறப்பாகவே எடுத்துக்
காட்டியுள்ளார். தற்காலத்தில்; க.நா.சு, மு.த
முதலானோரின் பார்வையின் இன்னொரு தொடர்ச்சியாகவே ஜெயமோகனின் எழுத்துக்கள்
அமைந்திருக்கின்றன. கைலாசபதி பற்றி ஜெயமோகனின் தாக்குதல்களும் இந்தப் பின்னணியில்
வைத்து நோக்கத் தக்கனவே. ஆக கைலாசபதி பற்றிய வெங்கட்சாமிநாதனின் விமர்சனத்தை
பலகோணங்களிலிருந்து விமர்சனத்திற்குட்படுத்திய எம்.ஏ. நுஃமான் “இந்நூல்(தமிழ்
நாவல் இலக்கியம்) பற்றிய சாமிநாதனின் விமர்சனம் கல்லறையை நோக்கி சென்றுக்
கொண்டிருக்கும் ஒரு பிற்போக்கு அரசியல் சித்தாந்த்தின் அவலக் குரலே தவிர
வேறோன்றுமில்லை”. என மிகப் பொறுத்தமாகவே சுட்டிக்காட்டுகின்றார். இவ்வரையறை
வெ.சாவிற்கு மாத்திரமன்று பொதுவாக இவ்வணியினருக்கு முற்று முழுதாக பொருந்தக்
கூடியவையாகவே அமைந்திருக்கின்றது.
இரண்டாவது பிரிவினர் கைலாசபதியை
சமூகவுணர்வுடனும் கரிசனையுடனும் நோக்கி அவரது பங்களிப்புகளை
வெளிக்கொணர்ந்துள்ளனர். அத்தகையோரில் ஒரு பிரிவினர், கைலாசபதியின் வாழ்க்கையiயும்,
எழுத்துக்களையும்
அவரது உலகநோக்கையும் முழுமையான ஆய்வுக்குரியனவாக கருதி பல அம்சங்களை
வெளிக்கொணர்ந்துள்ளனர். அவ்வாறு வெளி வந்திருக்கும் ஆய்வுகள் விரல்விட்டு எண்ணக் கூடியவையாகவே
உள்ளன. ஆராய்ச்சி பூர்வமான வாழ்க்கை வரலாறு இதுவரை எழுதப்படவில்லை என்பது
இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கதொன்றாகும். இருப்பினும் இத்துறையிலான தகவல்களையும்
வாழ்க்கை செய்திகளையும் ஆய்வுத் துறைச் சார்ந்த பங்களிப்புகளையும் முற்போக்கு மார்சியம்
ஆகிய இருதளங்களில் இருந்தும் வெளிக் கொணர்ந்துள்ளனர். முற்போக்கு தளத்தில் நின்று
இத்தகைய ஆய்வுகளை வெளிக் கொணர்ந்ததில் இராம. சுந்தரத்தின் கலாநிதி.க. கைலாசபதி
என்ற நூல் முக்கியமானதாகும். கைலாபதி பற்றிய பல தகவல்களையும் பதிவுகளையும்
தருகின்ற இந்நூலில் கைலாபதியின் ஆய்வு பங்களிப்பு சிறந்த முறையில் வெளிக்
கொணரப்படுகின்றது. இவ்வாறே கைலாபதி பற்றிய ஆரோக்கியமான தகவல்களையும் கைலாசபதியின்
ஆய்வு முக்கியத்துவத்தையும் கூடவே கே. எஸ். சிவகுமாரன் போன்றோரின் எழுத்து
முயற்சிகளுக்கு கைலாபதி எவ்வாறு உந்து சக்தியாக இருந்துள்ளார் என்பதை எமக்கு
எடுத்துக் காட்டுகின்ற பிறிதொரு நூல் கே. எஸ் சிவகுமாரன் எழுதிய “கைலாசபதியும்
நானும்”(1990, தமிழ் மனறம்,கண்டி). இருப்பினும் கே. எஸ்
சிவகுமாரன் கைலாசபதியின் க.நா.சு பற்றிய
ஆய்வுக் குறித்தும் ஆழகியல் பார்வைக் குறித்தும் முரன்பாடான கருத்துக்களையே முன்
வைக்கின்றார். இவை யாவும் கைலாசபதியின் திறனாய்வு குறைப்பாடாக சுட்டிக்
காட்டுகின்றார். இலக்கிய உலகில் கைலாபதியை முன்னிறுத்தி ஒரு முக்கிமான சர்ச்சை
நடப்பதன்டு. உருவமா-உள்ளடக்கமா என்ற அடிப்படையிலே அவ்வாதப் பிரதிவாதங்கள்
நடக்கின்றது. எண்பதுகளில் க.நா.சு அழகியலை வலியுறுத்தியவர் என்றும் அதற்கு நேர்
எதிர்மாறாக கைலாசபதி இலக்கியத்தில் பிரச்சாரத்தை வலியறுத்தியவர் என்றும்
கைலாசபதியை எதிர்ப்பவர்களால் மட்டுமல்ல அவரது ஆய்வுப் பங்களிப்பை ஏற்பவர்களும்
வலியுறுத்தப்பட்டு வந்ததுள்ளது. இலக்கியத்தில் உள்ளடக்கமா உருவகமா என்ற வீன்
வாதத்தில் இறங்காமல் இரண்டும் இயைபுப்பட்டே சிறந்த இலக்கியம் தோன்ற முடியும்
என்பதையும் இலக்கியத்தில் உள்ளடக்கம் எவ்வாறு வர்க்கச் சார்புக் கொண்டதோ அவ்வாறே
அழகியலும் வர்க்கச் சார்பு கொண்டது என்பதை மிகத் தெளிவாகவே கைலாசபதி
வலியுறுத்தியிருக்கின்றார். இத்தகைய சமூதாய கொள்கையை புரிந்துக் கொள்ளத்
தவறியமையினாலேயே கே. எஸ். சிவகுமாரன் போன்றோர் கைலாசபதி மீதான அத்தகைய
விமர்சனங்களை முன் வைக்கின்றனர். முற்போக்கு தளத்தில் நின்று கைலாசபதியின் பன்முக
ஆளுமையை வெளிக் கொணர்வதில கவிஞர். இ. முருகையன பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன்,
சபா
ஜெயராசா, க. அருணாசலம், செ.யோகராசா, எஸ்.சிவலிங்கராஜா,
திருவாளர்கள்.
ந. தெய்வசுந்தரம், தி.க. சிவசங்கரன், வல்லிக்கண்ணன், அசோகமித்திரன்
பிரேம்ஜி,ஆ; முகமது சமீம், தெணியான், கலாநிதிகள்
துரைமனோகரன், வ. மகேஸ்வரன், பாலசுமார் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கைலாசபதியின் வாழ்க்கையை
ஆராய்ந்து நிறுவும் வாழ்க்கை வரலாற்று நூல்களும் சில தோன்றியிருக்கின்றன.
கைலாசபதியை அறிந்தவர்கள் அறிந்தவர்கள் நெருங்கிய நண்பர்கள் அபிமானிகள் என்போரால்
எழுதப்பட்ட நூல்கள் சுவையுடையனவாகவும் பயன் தருகின்றனவாகவும் அமைந்திருக்கின்றன.
இவற்றின் மூலமாகவே கைலாசபதியின் அருமையையும், ஆய்வுத்திறனையும்
ஈடுபாடுகளையும் நாம் தெரிந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. அவ்வகையில் “கைலாஸ்-கைலாசபதி
நினைவேடு(1988), செ. கணேசலிங்கனின் “கைலாசபதி நினைவுகள்”(
1999) செ. சுபைர் இளங்கீரனின் “பேராசிரியர்
கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும்;”;(1992) ஆகிய நூல்கள்
முக்கியமாவையாகும்.
இவ்வாறே கைலாபதி பற்றிய ஆய்வுகளை
மார்க்சிய தளத்தில் நின்று அவரது ஆய்வுகள் சமூகத்திற்கு எத்தகைய பங்களிப்புகளை
நல்கியுள்ளது எனும் விடயங்களை வெளிக்கொணர்ந்ததில் எம்.ஏ நுஃமான், சித்திரலேகா
மௌனகுரு, கோ. கேசவன், நீர்வை பொன்னையன், சி. கா செந்திவேல், சி.சிவசேகரம்,
ந.
இரவீந்திரன், லெனின் மதிவானம் முதலியோரின் பங்களிப்புகள்; குறிப்பிடத்தக்கவையாகும்.
இவ்வணியினரில் எம்.ஏ நுஃமான், சித்திரலேகா மௌனகுரு முதலானோர்
இலக்கியத்தில் அழகியல் கொள்கைப் பற்றி கொண்டிருந்த நிலைப்பாடு(வர்க்கம் கடந்த
அழகியல் கோட்பாடு), கலை
இலக்கியத்தில் அழகியகியலும் வர்க்க முரண்பாடுகளையும் மோதல்களையும் சித்திரித்து
நிற்கும் என்ற கோட்பாட்டை நிராகரிப்பதாக அமைந்தமை தற்செயல் நிகழ்ச்சியல்ல.
அண்மைகாலத்தில் எம்.ஏ நுஃமான் அவர்களின்
எழுத்துக்களில் சமூகவியல் பார்வை முனைப்புற்றிருப்பதால் அழகியல் குறித்த தெளிவான
பார்வை முன்னிறுத்தப்படுவது நமக்கான நம்பிக்கையை தருவதாகவும் அமைந்திருக்கின்றது.
அவ்வாறே மார்க்சிய தளத்தில்
நின்று கைலாபதியை ஆய்வு செய்தவர்கள் அவரது மார்க்ஸிய பார்வை தமிழியல் சூழலில் எத்தகைய
பங்களிப்புகளை வழங்கியிருக்கின்றது என்பதை சிறப்பாக எடுத்துக்காட்டியள்ளனர்.
அதேசமயம் இனக் குழு சமூகச் சூழலில் ஐரோப்பிய வர்க்க ஆய்வு முறையை அப்படியே
பிரயோகிக்க முற்பட்டமையால் நமது மண்ணுக்குரித்தான விடயங்கள் போதியளவு கவத்தில்
கொள்ளடப்படாமல் போயிவிட்டமை துரதிஸ்டவசமானதொன்றாகும்;. இந்த தவறுகள்
கைலாபதி பற்றிய வெளிவந்த மார்சிய ஆய்வுகளிலும் காணப்படுகின்றது. தமிழியல் சூழலை
கவனத்திலெடுத்து பாரதி பற்றி கைலாபதி முன்வைத்த கருத்துகளில் பாரதியின் ஆன்மீகம்
சார்ந்த பார்வை குறித்து முரண்பாடான கருத்துக்கள் சிலவற்றினை கோ.கேசவன் , அ.மார்க்ஸ்
முதலானோர் முன் வைத்துள்ளனர். இன்று காந்தி குறித்தும் அவரது ஆன்மீக பார்வை
எவ்வாறு சமூகம் சார்ந்தாக இருந்தது என்பது குறித்தும் காத்திரமான கருத்துக்களை
முன்வைக்கின்ற அ. மார்க்ஸ் இன்று பாரதியின் ஆன்மீகம் பற்றி கைலாசபதியின் பார்வையை
ஏற்பார் என எதிர்பார்க்க கூடியதொன்றே.
இன்னொரு புறத்தில், 1980
களுக்கு பின்னர் தமிழியல் சூழுலில் முனைப்புற்றிருந்த புதிய இலக்கிய கோட்பாடுகளின்
பின்னணியில் கைலாசபதி; பொறுத்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக
கைலாசபதி; வலியுறுத்திய இலக்கி கோட்பாடுகள் காலவாதியாகிவிட்டது என்ற
பார்வையை அமை;பியல்வாதிகளும் பின்நவீனத்துவவாதிகளும் முன்னிறுத்துகின்றனர்.
அவ்வாறே என்பதுகளுக்கு பின்னர் தோன்றிய உலமயமாதல் நிகழ்ச்சி தி;ட்டமானது
இன்று அதன் உச்ச நிலையை அடைந்துள்ளது. இராணுவமயமாக்கத்தின் பின்னணியில்
நிலைநிறுத்தப்பட்டு வருகின்ற அந்நிகழ்ச்சி திட்டம் கலாசார ஆக்கிரமிப்பையும்
நடாத்தி வருகின்றது. இந்தப் பின்னணியில் ஏகாதிப்பத்திய நாடுகளும் அதன் கூட்டுகளும்
ஒன்றுசேர்ந்து தமக்கு சாதகமானவகையில் இலக்கிய கோட்பாடுகளையும் செல்நெறிகளையும்
தமக்கு சாதகமான வகையில் மறுவாசிப்பு செய்துக்கொள்கின்றனர். ஏகாதிபத்திய நாடுகளின்
ஆசியையும் அருளையும் பெற்றவர்கள் இப்பணியினை சிறப்பாக செய்து வருகின்றனர்.
ஆந்தவகையில் அவர்களால் முன்வைக்கப்பட்ட அமைபியல், பின்
நவீனத்துவம் முதலிய தத்துவங்கள் சமூகமாற்றப் போராட்டத்தில் ஐக்கிய பட வேண்டிய
ஜனநாயக சக்திகளை சிதைத்து- சின்னாப்பின்னமாக்கி- தனிமைப்படுத்தி இறுதில்
படுத்தோல்வி காணவும் செய்கின்றனர்;. இவர்களால் முன்வைக்கின்ற
தலித்தியம், பெண்னியம், போன்ற இலக்கிய கோட்பாடுகளை ஊன்றிக்
கவனிக்கின்ற போது இவ்வுண்மை புலபடாமல் போகாது.
மேலும் இன்றைய உலகமயமாதல் சூழலில்
தோன்றியுள்ள அதி தீவிர புரட்சியாளர்களும்- அவர்கள் சார்ந்த அவைக்களப் புலவர்களும்
இலக்கியத்தில் யந்திரபாங்கான பார்வைகளை நிலை நிறுத்துகின்றனர். இதுவரைக் காலமும்
மனித குலம் சேகரித்து வைத்திருந்த கலாசார பண்பாட்டுக் கூறுகள் யாவற்றையும் ஆதிக்க
சக்திகளின் கலாசாரமாக நோக்கி அவற்றை நிராகரிக்கின்றனர். ஒரு காலத்தில் சமூகவியல்
பார்வையில் தடம் பதித்திருந்த வரலாற்றையும் சில நேரங்களில் கைலாசபதியின் பெயரையும்
தமக்கு சாதகமானவகையில் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆவர்களின் எழுத்துக்களையும்
செயற்பாடுகளையும் ஊன்றிக் கவனிக்கின்ற போது, அதித
தனிமனிதவாதம் வித்துவக் காய்ச்சல் போன்ற அம்சங்களே அவர்களின் முத்திரையாக
இருப்பதைக் காணலாம். இத்தகைய தளத்தில்
நின்றுக் கொண்டு கைலாசபதி சார்ந்திருந்த இலக்கிய கோட்பாடுகளை தகர்க்க முனைவது: சில
சமயங்களில் அவரை தமக்கு சாதகமானவர்களாக காட்ட அவர்கள் எடுக்கும் விழாக்கள் மிவும்
ஆபத்தானதாகும். இப்போக்கானது மக்கள் இலக்கியத்திற்கே உலை வைக்க கூடியதாகும்.
இத்தகைய பார்வைகள் நமது ஆய்வுலகின் பரிதாபகரமான நிலையையே எடுத்துக்
காட்டுகின்றது.
மூன்றாவது பிரிவினர்
நடுநிலையாய்வு, விஞ்ஞானப்பார்வை என்பன எமது ஆய்வை வளப்படுத்தும என்ற
அடிப்படையில் செயற்படுகின்றவர்கள்;. இப்பிரிவில் முக்கியமானவர்
முதன்மையானவர் ந.இரவீந்திரன். இவ்வடிப்படையை மனங் கொண்டு கடந்த சில காலங்களாக
கைலாசபதி பற்றிய கருத்துக்களை கூறிவந்திருப்பவர் ந.இரவீந்திரன். அவரது பல ஆய்வுகள்
தமிழியல் சூழலில் மார்க்சிய பிரயோகத்தின் வெளிப்பாடுகளாகவே அமைந்திருக்கின்றன.
அவ்வெழுத்துக்கள் கைலாபதியின் தொடர்ச்சியையும் அதே சமயம் அத்தகைய
முன்னோடிகளிலிருந்து வளர்ந்து செல்ல வேண்டியதன் அவசியத்தையும் கோடிட்டுக்
காட்டுகின்றது. கைலாபதியின் எழுத்துக்கள்
தோற்றம் பெற்ற சூழ்நிலை, அவற்றின்
வரலாற்றுப் பின்னணி, அவற்றின்
சமுதாய இலக்கிய முக்கியத்துவம் என்பன இந்நூலில் கவனம் செலுத்தப்படுகின்றன.
பிரச்சனைகளை நுனிந்து நோக்கி ஆராயும் வெற்றி இரவீந்திரனின் ஆய்வுகளின் அடிப்படையான
அம்சமாகும்.
அவரது இந்நூலில் கைலாசபதி இயங்கிய
ஏறத்தாள மூன்று தசாப்தங்களையும் (1953-1982)
எடுத்துக்
காட்டுகின்றார். அக்காலச் சூழலின் விளைப்பொருளான கைலாசபதி காலத்தை உருவாக்குவதில்;
அவர்
ஆற்றிய பங்களிப்பினையும், அந்த மரபு தொடர்ந்து முன்னெடுக்கப்பட
வேண்டியதன் அவசியத்தையும், அவ்வாறு முன்னெடுத்து செல்கின்ற போது
கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களையும்- விமர்சங்களையும் இந்நூலின் மூலமாக வெளிக்
கொணரப்படுகின்றது. ‘முற்போக்கு இலக்கியத்திற்கு கைலாசபதியின் பங்களிப்பு’ என்ற
தலைப்பின் கீழ் முற்போக்கு இலக்கிய வரலாற்றில் கைலாசபதி எவ்வாறு ஒரு மை கல்லாக
திகழ்ந்தார் என்ற விடயம் அறிமுகக் குறிப்புகளாக தரப்படுகின்றது. அவ்வாறே ‘ஊற்றுக்கள்;’
என்ற
தலைப்பில் அவரது சமூக-கலை இலக்கிய செயற்பாட்டின் தோற்றுவாய்க் குறித்தும்,
‘புதியபாதை’
என்ற
தலைப்பின் கீழ் அவரது இயங்காற்றலின் புத்தாக்கம், வளர்ச்சி
பற்றியும் பேசப்படுகின்றது. தொடர்து, ‘மக்கள் இலக்கியம்’ என்ற
தலைப்பில் கைலாசபதியின் உச்ச பங்களிப்பாக திகழ்கின்ற முற்போக்கு இலக்கியத்திற்கான
கோட்பாட்டு உருவாக்கம் பற்றியும், ‘புதிய பண்பாடு’ என்ற
தலைப்பில் இன்றைய சமூகமாற்றத்துக்கான முன்மயற்சிகளை கைலாபதி எவ்வாறு
ஆக்கியிருக்கழின்றார் எனும் விடயம் பற்றி பேசப்படுகின்றது. இறுதியாக நாம்
இங்கிருந்து எங்கே செல்ல வேண்டும்? ஏன்பது பற்றிய தேடலாக கைலாபதி பற்றிய
நூலாசியரின் மதிப்பீடு; அமைத்திருக்கின்றது.
ந. இரவீந்திரனின் இந்நூலுடன்
இதுவரைக் கால ஆய்வகளை நோக்குகின்ற போது கைலாபதியின் முற்போக்கு மார்க்சியம்
சார்ந்த பங்களிப்பை சமூகப்பண்பாட்டுத் தளத்தில் வெளிபடுதியதுடன் கைலாசபதியின்
ஆய்வுப் பார்வைக்கு எதிராக தோன்றிய எதிர் வினைகள் குறித்தும் நீண்ட தத்துவார்த்த
போராட்டங்களையும் நடத்ததவறவில்லை.
குறிப்பாக குறுந் தமிழ் தேசியத்தின் பின்னணியில் தோன்றிய அரசியல் முனைப்புகளில்
ஒன்று தான் தமது குழு மனப்பாங்கு காரணமாக மஹாகவியை கைலாசபதி காணத்தவறிவிட்டார்
என்ற வாதமாகும். அதனை கோட்பாட்டுத்தளத்திலிருந்து நிராகரிக்கின்றார் நூலாசிரியர.;
அன்றை
சூழலில் முனைபுற்றிருந்த தீண்டாமை வெகுசன ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுத்த தேசிய
ஐனநாயக- முற்போக்கு -மார்க்சிய அணியை நாடி கைலாபதி அப்பேராட்டத்தை சரியான திசையில்
முன்னெடுப்பதற்கு எத்தகைய பாத்திரத்தை வகித்தார் என்பதை தக்க ஆதாரங்களுடன்
வெளிப்படுத்தியிருக்கின்றார்;.
இந்நூலில் கவிஞர். முருகையனின் “கோபுர
வாசலும் புலைப்பாடியும்” என்ற நாடகம் பற்றிய கைலாபதியின்
விமர்சனத்தை கோடிட்டுக் காட்டுகின்றார். “இத்தகைய எழுச்சியில்(தீண்டாமை
வெகுசன போராட்டம்-கட்டுரையாளர்) கோயில் நுழைவுப் போராட்டமும் ஓர் அங்கம்: அதன்
தூண்டலிலும் அதற்கு உத்வேகம் வழங்கும் வகையிலும் “கோபுரவாசல்”
என்கிற
நாடகத்தை வடித்தார் முருகையன். நந்தனார் கதையை உளவியல் அணுகுமுறையில் அவர் நாடகப்
பொருளாக்கியிருந்தார். இதனை மையமாக்கி நந்தனார் கதையை சுந்தர மூர்த்தி நாயனார்,
நம்பியாண்டார்
நம்பி, சேக்கிழார், கோபாலகிருஷ்ண பாரதியார் போன்றோர்
வாயிலாக வளர்ந்தவாறினைப் “புலைப்பாடியும் கோபுரவாசலும்” என்ற
ஆய்வுக் கட்டுரையாக வடித்தார் கைலாஸ். இதன்வாயிலாக சாதியப்பிரச்சனைக் குறித்து
அவர் முன் வைத்த கருத்துக்கள் மார்க்சிய செல்நெறிக்கு மிகப்பெரும் பங்களிப்பாக
அமைந்தன” என்பார் நூலாசிரியர்(ப.25). அந்நாடகத்தில்
இந்திய கோயில் நிர்வாகத்தில் பிராமணர்கள் முதன்மை பெறுவது போல இலங்கையில் கோயில்
நிர்வாகத்pல் வேளாரே முதன்மை பெறுவர். எனவே இந்நாடகத்தில் வெள்ளாளக்
கோயில் முகாமையாளர் ஒருவரை பாத்திரமாக்கி அவருடனான வர்க்க மோதலை காட்டியிருக்கலாம்
என்ற கைலாபதியின் விமர்சனத்தின் நுண்ணுணர்வை இந்நூலாசிரியர் மிகச் சிறப்பாகவே
எடுத்துக்காட்டுகின்றார். அன்றைய போராட்டச்
சூழலில் வெளிப்பட்ட கைலாபதியின் எழுத்துக்கள் அப்போராட்டத்தை சரியான
திரைமார்க்கத்தில் இட்டுச் செல்வதில் எத்தகைய காத்திரமான பங்களிப்பினை
நல்கியுள்ளது என்ற விடயமும் இந்நூலில் சிறப்பாக
அடையாளப்படத்ததப்பட்டுள்ளது.
அதேசமயம், கைலாசபதியின்
சமூகவியல் பார்வையையும் பங்களிப்பையும்- சமூவியல் நோக்கில் இலக்கியத்தையும்
இயக்கத்தையும் ஆணுகும் முறையியலைக் குறிப்பிடத்தக்க வகையில் பிரதிப்பலித்து
நிற்கின்ற இந்நூல் கைலாசபதி விட்டு சென்ற இடைவெளியையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை.
இலங்கையில் அறுபதுகளில் சாதிய
எதிர்ப்புப் போராட்டம் தேசியத்தின் வடிவமாக இருந்தது போன்று எழுபதுகளில்
தழிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டமும் முனைப்புப் பெற்றுக் காணப்பட்டது.
இதனை தமிழ் முதலாளித்துவ சக்திகள் இனவாதத்தினுள் அழுத்திச் சென்றனர். இதன்காரணமாக
தமிழ் ஜனநாயக சக்திகள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த அணியினை நாடவேண்டி
இருந்தனர். இடதுசாரிகள் இந்த ஜனநாயக சக்திகளை வென்றெடுக்கக் கூடியவாறு சிங்கள
மக்களுடன் ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்தபக்கமாக பேரினவாதத்திற்கு எதிராகப்
போராடுதல் என்ற அம்சத்தையும் இணைத்திருப்பார்களாயின் இந்த ஜனநாயக சத்திகளின் ஒரு
பகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும்(லெனின் மதிவானம், மஹாகவி பற்றிய
கைலாசபதியின் மதிப்பீடு, மூன்றாவது மனிதன்.1996)
அன்றைய சூழலில் இடதுசாரிகள்
எவ்வாறு தமிழர் சமூவமைப்பில் புரையோடி போயிருந்த சாதியத்திற்கு எதிரான
போராட்டத்தில் முக்கிய கவனமெடுத்தினரோ அவ்வாறே தமிழரசுக் கட்சியினர் பேரிவாதத்திற்கு
எதிரான முற்போக்கான சிந்தனையை கொண்டிருந்தனர். அதே சமயம,; தமது வர்க்க
நலன் காரணமாக சாதிய போரட்டத்தை புறக்கணித்தமை துரதிஸ்டவசமான நிகழ்வாகும். பின்
வந்த காலங்களில் ஒரு நசிவு தரும் அரசியல் சூழலில் தமது முற்போக்கு தன்மையை இழந்து
பிற்போக்குவாதரிகளின் கூடாரமாக அவ்வமைப்பு மாறியமை துரதிஸ்டவசமானதொன்றாகும். இந்த
இடைவெளியை நாம் கைலாபதி புரிந்துக் கொள்ள தவறியதால் சிலப்பதிகார காவியத்தை
நோக்குவதில் எத்தகைய தவறுகள் நேர்ந்தது என்பதையும் நூலாசிரியர் சிறப்பாக எடுத்துக்
காட்டுகின்றார்.
“அன்றைய வரலாற்றுப் பின்னணியில்
தமிழ்த் தேசியத்தை ஏற்காமையினால் சிலப்பதிகாரம் குறித்து நிதானமான பார்வையை
வெளிப்படுத்த இயலாததைப் போன்றே பாரதிதாசன் தமிழ் தேசியத்தை வரித்துக் கொண்டது
பற்றிக் கூற வேண்டிய இடத்தில் ‘கலாசார தேசியத்திற்கு அவர் ஆட்பட்டார்
எனக் கூறுகின்றார். இந்த ஆய்வு நிலைப்பட்ட பார்வை, சமகால தேசிய
இனப்பிரச்சனை தொடர்பாக வெளிப்பட்ட தவறான அணுகுமுறையின் பேறாகும். தமிழ்த்
தேசியத்தை முன்னெடுத்த தலைமைகளிடம் வலதுசாரிப் பிற்போக்குப் பாசிசக் குணாம்சமும்
ஏகாதிபத்தியசக்திகளுக்குக் காட்டி கொடுக்கும் ஐந்தாம் படைத் தன்மையும் இருந்தது
மெய்யாயினும், பெரும்பாலான மக்களும் ஊழியர்களும் இடதுசாரி தமிழ் தேசியத்தால்
பட்டிருக்கவல்லவர்களே. பாரதிதாசனும் கூட இடதுசாரி தமிழ் தேசியத்தின் கவியாக
திகழ்ந்தவர். மார்க்சியர்கள் அத்தகைய இடதுசாரி தமிழ் தேசியத்தை ஐக்கியப்படுத்த
ஏற்றதாக இனங்கன்று வளர்த்தெடுக்க முன்வருகையில் இனப்பிரச்சனை சரியாக அணுகவில்லை.”
கைலாசபதியின் ஆய்வுத்
தடத்தில் தன் பார்வையை பட்டைத் தீட்டிக்
கொண்ட இந்நுலாசிரியர் கைலாசபதியின் பார்வையை இன்னொரு- புதிய பண்பாட்டுச் சூழலில்
முன்னெடுத்து செல்கின்ற ஆய்வு முயற்சியின் வெளிப்பாடாகவே இவ்விமர்சனம் அமைந்திருக்கின்றது.
இதுவரை கைலாபதி பற்றி வெளிவந்த
ஆய்வுகளை ஒப்பு நோக்குகின்றபோது ஒரு விடயம் திரும்பத் திரும்ப
வலியுறுத்தப்படுவதைக் காணலாம். ஒன்று கைலாபதியை கடவுளாக்கி(ஜெயமோகன் மாடன் மோட்சம்
என்ற சிறுகதையில் ஒடுக்கப்பட்ட மக்களின் கடவுளான மாடனை மேல் நிலையாக்கம் செய்து
மந்திரங்களால் கட்டிவிடுவது போல) அவரது ஒவ்வொரு சொல்லும் வழிப்படத்தக்கவை என்று
கூப்பாடு எழுப்புவோர் ஒருப்புறத்தில் ஆர்பரித்து நிற்பதைக்காணலாம். இன்னொருபுறத்தில் கைலாசபதியின் மீதான
தாக்குதல்களின் ஊடாக மக்கள்
இலக்கியத்தையும்- அதன் கோட்பாடுகளையும்- இலக்கிய கர்த்தாக்களையும் தாக்க முனையும்
எத்தனிப்புகள். இவ்விரு ஆய்வு பார்வைகளுமே ஒரு தலைப்ட்சமானவை என்பது மட்டுமல்ல
கைலாபதியை கொச்சைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன. இவ்வாறான நசிவு தரும் பண்பாட்டு சூழலில்,
கைலாசபதியின்
சமூகவியல் பார்வையையும் பங்களிப்பையும்- சமூவியல் நோக்கில் ஆணுகும் முறையியலைக்
குறிப்பிடத்தக்க வகையில் பிரதிப்பலித்து நிற்கின்ற இந்நூல் கைலாசபதி விட்டு சென்ற
இடைவெளியையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை. அந்தவகையில் கைலாசபதி பற்றி
வெளிவந்திருக்கும் ஆய்வுகளில் இந்நூலுக்கு முக்கிய இடமுண்டு.
முற்போக்கு
கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்திருந்த கைலாசபதியின் முப்பதாவது நினைவுத்தின
உரையில்(2012-டிசம்பர்)
முற்போக்கு இலக்கியத்திற்கு கைலாசபதியின் பங்களிப்பு நூல் பற்றி ஆற்றிய உரை.
நன்றி இனினொரு.கொம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)